‘முட்டு’ வைக்க மறந்த ஊழியர்கள்... அரக்கோணத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது... 8 ரயில்கள் தாமதம்
அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டதால், அங்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 8 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 8 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயிலானது, இரவு அங்குள்ள யார்டிலேயே நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த ரயில் நிறுத்தப்படும் பகுதி சற்று தாழ்வானது என்பதால், ரயில் நகர்ந்து விடாமல் இருக்க அதன் சக்கரங்களுக்கு இடையே ஊழியர்கள் முட்டு எனப்படும் சதுர வடிவிலான இரும்பு துண்டுகளை வைப்பர். ஆனால், நேற்று இந்த முட்டுக்களை வைக்க ஊழியர்கள் மறந்து விட்டதாகத் தெரிகிறது.
இதனால், 8 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயில் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது. அதிகாலை நேரத்தில் டிராக் சேஞ்ச் பகுதி வரை நகர்ந்து வந்த ரயில், அதனை சேதப்படுத்தியது. அதோடு, அந்த மின்சார ரயிலின் கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து முழுவதுமாக தடம் புரண்டது.
இந்த விபத்தால், அங்குள்ள அனைத்து சிக்னல்களிலும் கோளாறு ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் தான் சிக்னல் கோளாறு ஏற்பட்டது ஊழியர்களுக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நேரத்தில் சென்னை மார்க்கமாக சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காச்குடா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், மற்றும் மேலும் சென்னை செல்லும் 4 மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இந்த சிக்னல் கோளாறு ஒருமணி நேரம் கழித்து சரி செய்யப்பட்டது. இதையடுத்து பாதி வழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த தாமதத்தால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.