தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வம்சாவளியினர் நெகிழ்ச்சி
தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை அவரது வம்சாவளியினர் பார்வையிட்டனர்.
நெல்லை : திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த அவரது வம்சாவளியினர் பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் வசித்த வீடு அமைந்து உள்ளது. அவர் இறந்த பிறகு அவரது உடல் இடையன்குடி தூய திருத்துவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்டுவெல் வாழ்ந்த அந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக பராமரித்து வருகிறது.
இந்நிலையில், பிஷப் கால்டுவெல் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் டேசா, கேட் ஆகியோர் இடையன்குடிக்கு நேற்று வந்தனர். அவர்களை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பிஷப் கால்டுவெல், அவருடைய மனைவி எலைசா ஆகியோரது நினைவிடங்களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த தங்கள் வம்சாவளியினரின் பழைய புகைப்படங்கள் மற்றும் பொருட்கள், பிஷப் கால்டுவெல் பயன்படுத்திய பொருட்களையும் பார்வையிட்டு நெகிழ்ந்தனர்.
இதுகுறித்து டேசா, கேட் இருவரும் கூறுகையில், எங்கள் வம்சாவளியை சேர்ந்த பிஷப் கால்டுவெல் தமிழ் மொழிக்கு இலக்கிய பணிகள் ஆற்றி உள்ளார் என்பதை படித்துள்ளோம். ஆனால் இங்கு வந்த பிறகுதான் அவரது தமிழ் பணியை நேரில் அறிந்து கொண்டோம்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பெயரில் இங்கு பள்ளிக்கூடங்கள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள், அவருடைய மனைவி பெயரில் கல்லூரி, அவர் நிறுவிய மருத்துவமனை ஆகியன இன்றுவரை செயல்பட்டு வருவது எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எங்கள் வம்சாவளியை சேர்ந்த கால்டுவெல்லை இன்றளவும் தமிழ்மக்கள் மனதில் வைத்து இருப்பது எங்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. தமிழக அரசு, கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை பராமரித்து வருவது எங்களது குடும்பத்துக்கு பெருமையாக உள்ளது. அவர்களுக்கு எங்கள் நன்றிகள் என்று தெரிவித்தனர்.