பதவி, பொறுப்புக்காக பிரிவினையா... பொதுமக்கள் மத்தியில் கொந்தளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ்
மக்கள் நலனை விட்டுவிட்டு, பதவி பொறுப்பு வேண்டும் என்று தனி தனி அணியாக அ.தி.மு.கவினர் பிரிந்து கிடைக்கலாமா என்று பொதுமக்கள் மத்தியில் மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுடனான கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடிய மைலாப்பூர் எம்.எல்.ஏ.ஆர். நட்ராஜ் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்," மக்கள் நலன் ஒன்றைமட்டுமே அ.தி.மு.க. தொண்டர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . பதவி, பொறுப்புகள், அதிகாரம் குறித்து தொண்டர்கள் கவலை கொள்ள கூடாது." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 7 வார்டுகளிலும் உள்ள குறைகளை பற்றி புகார் தெரிவிக்க வாட்ஸப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.
இணையதள செயலி ஒன்றும், தனி மின்னஞ்சலும் மக்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க வசதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் தொகுதி மக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். கடந்த ஓராண்டில் தொகுதி வளர்ச்சி நிதியாக வந்த 2 கோடியை முழுமையாக செலவிட்டுள்ளோம்.
அதிமுகவின் பலமே அதன் தொண்டர்கள்தான். அவர்கள் பிரிந்திருக்க கூடாது. பதவி, பொறுப்புகள், அதிகாரங்கள் பற்றி கவலைப்படாமல், மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ளவேண்டும். எனவே பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் " என்றும் தெரிவித்தார் நட்ராஜ்.
ஓபிஎஸ், இபிஎஸ் என்று பல அணிகள் உள்ள நிலையில் பல தலைமைகள் இருக்கும்போது எந்த அணியில் யார் தலைமையில் இணைய வேண்டும் என்று நட்ராஜ் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.