கல்குவாரியில் அனுமதியின்றி டெட்டனேட்டர்கள் பதுக்கல்- உரிமையாளர் தப்பி ஓட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தட்டம்பாறை கல்குவாரிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வெடிமருந்து மற்றும் வெடி பொருட்கள் சிக்கியதால் அதன் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக வெடிபொருட்களை பாறைகளில் துளையிட்டு வைப்பது வழக்கம். இவற்றில் சில வெடிபொருட்கள் வெடிக்காமல் போய் விடுவது வாடிக்கை. இவ்வாறு வைக்கப்பட்ட வெடிபொருட்களை குவாரியில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டுபிடித்து அப்புறப்படுத்த வேண்டியது கட்டாயம்.
இந்த வெடிபொருட்கள் சமூக விரோதிகள் கையில் சிக்கினால் அவற்றை சதி திட்டத்திற்கு உபயோகிக்கலாம் என்பதால் இந்த விதி அமுலில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான குவாரிகளில் இந்த விதிமுறைகளை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரோலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்த எஸ்பி துரை உத்தரவிட்டார்.
இதையடுத்து தட்டம்பாறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் மற்றும் போலீசார் தட்டம்பாறை பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மேல்தட்டம்பாறையை சேர்ந்த தங்கமாரியப்பன் என்பவரது கல்குவாரியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பாறைகளில் வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் இருந்த கிளாஸ் 2 வகையை சேர்ந்த 25 கிராம் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது போல் தூத்துக்குடியை சேர்ந்த காசிராஜன் என்பவரது கல்குவாரியில் நடந்த சோதனையில் எலக்ட்ரான்ராக் டெட்டனேட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தட்டம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கமாரியப்பன், காசிராஜன் ஆகியோரை தேடி வருகின்றனர்.