திருட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாகப் போய் மைல்கல்லில் மோதி பலியான திருடன்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபர் ஒருவர் மைல்கல்லில் மோதி பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை பஸ் நிலையம் முன்பு செல்போன் கடை வைத்து இருப்பவர் கோடிஸ்வரா முருகன்.
தேவகோட்டையில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு கோடிஸ்வரா முருகன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றார்.
திருட்டுப் போன மோட்டார் சைக்கிள்:
கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து கோடிஸ்வரா முருகன் தேவக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விபத்துக்குள்ளான திருடன்:
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞர் அதனை வேகமாக ஓட்டி சென்றார். பாவனக்கோட்டை என்ற இடத்தில் சென்றபோது சாலை ஓரம் இருந்த மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியது.
காயங்களுடன் மயக்கம்:
இதில் கீழே விழுந்த இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சாலை ஓரம் வாலிபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞர்:
உடனே அவரை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இரவு 2 மணி அளவில் அந்த வாலிபர் இறந்துவிட்டார். அவரைப் பற்றிய விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.