களைகட்டிய தேவர் ஜெயந்தி.. முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
இன்று களைகட்டத் தொடங்கிய தேவர் குருபூஜையில் பாதுகாப்பு பணிக்காக முதன் முறையாக ஆளில்லாத விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மதுரை: தேவர் குருபூஜையில் பாதுகாப்பு பணியில் முதன் முறையாக அதிநவீன ஆளில்லாத விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது. வெள்ளிக் கிழமை தொடங்கிய மூன்று நாள் விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆளும் கட்சி முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வரும் இந்த நாட்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆன்மிக விழா நடைபெற்றது. அதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும, முதன் முறையாக அதிநவீன ஆளில்லாத விமானத்தை தமிழக காவல்துறை ஈடுபடுத்தியுள்ளது. மேலும், கீழச்செவல்பட்டி, காரைக்குடி உட்பட 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.