முன்னேறும் பெயிண்ட் தொழில்.. பின்னுக்கு போகும் சுண்ணாம்பு
பெயிண்ட் அடிக்கும் முன்னேற்றம் அடைந்து வருவதால் சுண்ணாம்பு தொழில் பாதிப்படைந்துள்ளது.
நெல்லை: நெல்லை பகுதியில் சுண்ணாம்பு விற்பனை மந்தமாக இருப்பதால் சுண்ணாம்பு அடிக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் திருவிழா, விசேஷ தினங்களில் கிராமப்புற மக்கள் தங்களது இல்லங்களை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து கோலமிட்டு அலங்கரிப்பர். இதனால் சுண்ணாம்பு தொழில் கொடி கட்டி பறந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நாகரிக மோகத்தால் பலர் சுண்ணாம்பு அடிப்பதற்கு பதில் பெயிண்ட்டை தேர்வு செய்து வருகின்றனர்.
இதனால் சுண்ணாம்பை சுத்தமாக மக்கள் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் காரணத்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சுண்ணாம்பு தயாரிக்க 10 முதல் 15 அடி உயர அளவிலான கன்வாய் அமைக்கப்படுகிறது. இதற்குள் ஓடைக்கல், கரித்துள் ஆகியவற்றை அடக்கி அடியில் தென்ன மட்டை, பனங்கொட்டை, தேங்காய் மட்டை உள்ளிட்ட எரிபொருளை பயன்படுத்தி வேக வைத்து சுண்ணாம்பு தயாரிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக இதை பலர் செய்து வருகின்றனர். சமீப காலமாக இந்தத் தொழிலை விட்டு பலர் வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்று வருகின்றனர். இன்னும் சிலர் நகர்புற பகுதிகளுக்கு மாறி சென்று விட்டனர்.
இதுகுறித்து இத்தொழிலைச் சேர்ந்த சிலர் கூறுகையில், இன்றைய நிலையில் இந்த தொழிலை ஒரு சிலர் மட்டுமே இந்த பகுதியில் செய்து வருகிறோம். இதனால் பல டன்னாக இருந்த சுண்ணாம்பு தயாரிப்பு தற்போது 1 டன்னாக குறைந்து விட்டது என கவலை தெரிவித்தனர்.