8 வழி சாலை வந்தா, இந்த அரசு காணாம போயிடும்.. சேலத்தில் சாமியாடிய பெண் அருள்வாக்கு
சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் கிராம மக்கள் மனு
சேலம்: 8 வழிச்சாலை அமைந்தால் இந்த அரசு காணாமல் போய்விடும் என சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி கிராமத்தில் ஒரு பெண் அருள்வாக்கு சொல்லியுள்ளார்.
சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் நிலம் கையகப்படுத்தும் பணியினை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதனால் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது 5 மாவட்ட மக்களையும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி மக்கள் முடிவெடுத்தனர். அதனால் தங்கள் கிராமத்திலேயே உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு விவசாயிகள், பெண்கள் அனைவரும் ஒன்றாக கிளம்பினர். எதிர்ப்பினை வெளிப்படுத்த எல்லோரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். அவர்களின் கையில் ஒரு கோரிக்கை மனுவும் இருந்தது.
அதில், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை பூசாரியிடம் கொடுத்து அம்மன் காலடியில் வைக்க சொன்னார்கள். அதன்பின்னர் அம்மனிடமே அந்த மனுதரப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு அனைவரும் பொங்கலிட்டனர்.
அப்போது பக்தை ஒருவருக்கு திடீரென்று சாமி வந்துவிட்டது. அருள்வாக்கு கூறவும் தொடங்கினார், "யார் நிலத்தையும் எடுக்க விட மாட்டேன். எடுத்த நிலத்தை எல்லோருக்கும் திருப்பி தருவேன், இது சத்தியம், ஒருவேளை 8 வழி சாலை இங்கே வந்தா, இந்த அரசு காணாம போயிடும்" என்றார். இதனையடுத்து சிறிது நேர பரபரப்புக்கு பின் அங்கு அமைதி நிலவியது.