மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. கோவில்களில் கடைகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து கோயில்களில் உள்ள கடைகளை விரைந்து அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து கோயில்களில் உள்ள கடைகளை விரைந்து அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றாடம் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடவே பலர் கோயிலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதில் பல கோயில்கள் சரித்தர வரலாற்றை கொண்டுள்ளது. சமீப காலமாக கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய கோயில்களின் வெளிப்புறத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாயை குறிக்கோளாக கொண்ட அறநிலையத்துறை கோயில் பிரகாரத்திற்கு உள்ளேயே கடைகளை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளது.
இதனால் கோயில் நிர்வாகத்திற்கு கடைகள் மூலம் அதிக வருமானம் கிடைத்து வருகிறது. இப்படி அமைக்கப்படும் கடைகளில் பூஜை பொருட்களை மட்டுமே விற்கப்படுவதில்லை. மாறாக அழகு சாதன பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பாத்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் சேர்த்தே விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது கோயில்களில் யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல், ரதவிதிகளில் சிறப்பு உண்டியல் என பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை இதில் மட்டுமே குறியாக இருப்பதால் கோயில் பாதுகாப்பு கேள்வி குறியாகி விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை கோயில் தீ விபத்தை அடுத்து அனைத்து கோவில்களிலும் இருக்கும் கடைகளை முறையாக அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.