தைத் திருநாள்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் !
திருச்செந்தூர்: தைத் திருநாளையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம். மாசி திருவிழா, வைகாசி விசாகம், ஐப்பசி கந்த சஷ்டி விழா மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் தைப் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூரில் குவிந்தனர்.
பக்தர்கள் தைப் பொங்கல் நாளில் அதிகாலையிலே சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தங்களது இல்லங்களுக்குத் திரும்பிச் சென்று, பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு தைப் பொங்கல் நாளையொட்டி, சில நாள்களாகவே இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
தைப் பொங்கல் நாளை முன்னிட்டு, கோயில் நடை வெள்ளிக்கிழமை (ஜன. 15) அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
காணும் பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. பகலில் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி கணுவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.