கோவில்களில் மட்டுமே தொடரும் தீ விபத்து... அரசியல் ஆதாயத்துக்காக விஷமிகள் சதி?
தமிழக கோவில்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் தொடர்ந்து வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன
Recommended Video
சென்னை: தமிழக கோவில்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் தொடர்ந்து வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. தமிழகத்தில் காலூன்றுவதற்காக அரசியல் ஆதாய நோக்கத்துடன் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு தீ விபத்துகளை விஷமிகள் செய்கிறார்களோ? என்பது பக்தர்கள் சந்தேகம்.
வட இந்தியாவைப் போல தமிழகத்தில் இந்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே வன்முறையை நிகழ்த்தும் வியூகம் எதுவும் எடுபடவில்லை. ஆண்டாள் விவகாரத்தில் இந்துக்களே வாருங்கள் என அழைப்பு விடுத்தார்கள்.
ஆனால் நாங்கள் இந்துக்கள் அல்ல- தமிழர்கள்; எங்களது மதம் சைவம்; நாங்களும் லிங்காயத்துகளைப் போல தனி மத அங்கீகாரம் கோருவோம் என எதிர்வினைதான் வந்தது. இதனால் இந்துக்களாக ஒருங்கிணைக்கும் சக்திகளின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
மீனாட்சி அம்மன் கோவில் விபத்து
இந்நிலையில் கோவில்களில் திடீர் திடீரென தீ பிடிக்கும் சம்பவங்கள் தொடருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரம் பகுதியில் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல நூற்றாண்டுகால மண்டபம் நாசமானது.
இந்து ஆலய மீட்பு
இதை உடனே சதி வேலை என கூறி இந்துக்களே இந்து ஆலயங்களை மீட்போம் என பீதியை கிளப்பி வருகின்றனர் சிலர். இந்து அறநிலையத்துறையிடம் இருந்து ஆலயங்களை மீட்டு இந்துக்களிடம் கொடுப்போம் என்கிற பழைய பல்லவி தொடர்ந்து பாடப்பட்டு வருகின்றன.
தீ விபத்து பக்தர்கள் சந்தேகம்
இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் திருவாலங்காடு கோவில் ஸ்தல விருட்சமான ஆலமரம் நேற்று பற்றி எரிந்தது. அடுத்தடுத்து கோவில்களில் மட்டும் தீ விபத்து ஏற்படுவது ஏன் என்பது பக்தர்களின் சந்தேகம்.
இந்துக்களுக்கு ஆபத்து கோஷம்?
அரசியல் ரீதியாக காலூன்றுவதற்காக இங்கே புதிய யுக்தியாக தீ விபத்து சம்பவங்களை விஷமிகள் நிகழ்த்துகிறார்களோ? என்கிற சந்தேகத்தை பக்தர்கள் எழுப்புகின்றனர். இப்படி செய்வதன் மூலம் இங்கே இந்துக்களுக்கு ஆபத்து என்கிற கோஷத்தை வலுவாக்க முடியும் என அந்த விஷமிகள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.