மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
மதுரை: மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆடி வீதியில் அலங்கார பந்தலில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 10ம் நாளான இன்று மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
சுப்ரமணியரும், பெருமாளும்
திருக்கல்யாணத்தையொட்டி காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினர்.
சொக்கநாதர் மீனாட்சி
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அலங்கார மேடையில் திருக்கல்யாணம்
தொடர்ந்து காலை 9.51 மணிக்கு மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதர் எழுந்தருளினார். பின்னர் பிரியாவிடை அம்மனுடன், சர்வ அலங்காரத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன் மணமேடையில் எழுந்தருளினார்.
வைரக்கல் திருமாங்கல்யம்
காலை 10.47 மணிக்கு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வைரக்கல் பதித்த திருமாங்கல்யம் மீனாட்சிக்கும், பிறகு பிரியாவிடைக்கு அணிவிக்கப்பட்டது.
புதுத்தாலி மாற்றிய பெண்கள்
மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் கட்டப்பட்ட நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது திருமாங்கல்ய கயிறுகளை மாற்றிக் கொண்டனர்.
மொய் எழுதிய பக்தர்கள்
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் பக்தர்கள் மீனாட்சி அம்மனுக்கு மொய் எழுதினர்.
தாலி கொடுத்த பக்தர்கள்
தங்கள் வீட்டுப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று மீனாட்சி அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்களுக்கு தாலியும் மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுத்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் கோயில் சார்பில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தையொட்டி மதுரையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரை தேரோட்டம்
ஞாயிறு காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 4 மாசி வீதிகளில் தேர் உலா வந்து பக்தர்களுக்கு சுவாமியும், அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.