நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருநெல்வேலி: மார்கழி உற்சவ திருவிழாவை முன்னிட்டு திங்கள் கிழமையன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள நவதிருப்பதி கோயில்களில் சுவாமிகள் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நவத்திருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருவிழா பகல்பத்து, ராபத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெறுகின்றது. பகல் பத்து திருவிழா டிசம்பர்.11ம் தேதி தொடங்கி ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 20 வரை நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயிலில் நடைபெரும் திருவிழா நாட்களில் தினமும் மாலை 7 மணிக்கு சேர்த்தியில் நவநீத கிருஷ்ணன், நாச்சியார் திருகோலம், மாரிசன் வதை, கஜேந்தி மோஷம், கன்று கொண்டு விளாங்கனி எறிதல், கோபியர் துகில் பறித்தல், கோவர்த்தனகிரியை குடை பிடித்தல், வாமனாவதாரம், ஆண்டாள் ஆகிய திருக்கோலங்களில் சுவாமி கள்ளபிரான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தினமும் இரவு 9 மணிக்கு வேணுகோபாலன், வீணை மோகினி, ராமாவதாரம், கெருட வானகம், எழுமராமரம், காளிங்கநர்த்தனம், புள்ளியன் வாய்கிழித்தல், தவழும் கண்ணன், மோகினி ஆகிய திருக்கோலங்களில் சுவாமி கள்ள பிரான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கள்ளபிரான் தரிசனம்
ராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி தினமான திங்கள் கிழமை காலை 4 மணிக்கு விஸ்வரூபம் நடைபெற்றது. காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மாலை 3 மணி வரை சுவாமி கள்ளபிரான் ஆதிகேசவன் குடை பிடிக்க சேஷ சயனத்தில் தாயார்கள் வைகுந்தவல்லி, சோரநாதநாயகி ஆகியோர்களுடன் அர்த்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சயன திருக்கோலத்தில் தரிசனம்
இதைபோல், நத்தம் , திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்றபிரான்) ஆகிய கோயில்களில் சுவாமிகள் தாயார்களுடன் சயன திருக்கோலத்தில் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை எழுந்தருளினர்.
சொர்க்க வாசல் திறப்பு
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நவத்திருப்பதி கோயில்களில் நெய் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் இரவு 7.15 மணி அளவில் பரமபத வாசல் திறப்பு என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பத்தி உலாவுதல், படியேற்றம், கற்பூர சேவை நடைபெற்றது. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் இரவு 8 மணிக்கும், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் அதிகாலை 1 மணிக்கும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.