தமிழ் புத்தாண்டு கோலாகலம் - ஆலயங்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு
சென்னை: சித்திரை முதல்நாளான இன்று துர்முகி ஆண்டு பிறந்துள்ளது. துர்முகி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஏராளமானோர் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கோவில்களில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மாதவப் பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில், பூக்கடை பகுதியில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் என அனைத்து கோவில்களிலும் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பூரில் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், ஸ்ரீகுருவாயூரப்பன் கோவில், திருப்பூர்-திருப்பதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவில்களுக்கு வந்த பக்தர்களுக்கு கை நீட்டம் எனப்படும் புத்தாண்டு காசு கொடுத்தனர். புது வருடப் பிறப்பன்று அன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் நாணயம் பெறுவார்கள் இதுவே கைநீட்டம் என்று கூறப்படுகிறது.
திருப்பூர், கோவை, குமரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் புத்தாண்டு தினத்தன்று சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காசு மற்றும் காய், கனிகள் வழங்கப்படுவது சிறப்பம்சமாகும். செல்வந்தராக இருந்தாலும் பொறுமையாக வரிசையில் நின்று பிரசாதமாகக் கைநீட்டம் பெறுவது வழக்கம். கோவிலில் கைநீட்டம் பெற்றால் ஆண்டு முழுவதும் பணம் குவியும்; செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.
சித்திரை முதல் நாளான இன்றைய தினத்தை விவசாயிகள் பொன்னேர் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர். இந்நாளில் விவசாயிகள் ஏர், கலைப்பை மற்றும் மாடுகளை அலங்கரித்து நிலத்திற்கு ஊர்வலமாக சென்று நிலத்தை உழுது வழிபடுவது வழக்கம். பின்னர் வீடு திரும்பும் ஆண்கள் மீது பெண்கள் மஞ்சள் தெளித்து வரவேற்பதை வழக்கமாக கொண்டாடி வருகின்றனர்.