சித்ரா பவுர்ணமி... தமிழக கோவில்களில் பக்தர்கள் பால்குடம், காவடி, கிரிவலம்
சென்னை: சித்ரா பவுர்மணியையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் பால் குடிம் எடுப்பது, காவடி எடுப்பது, கிரிவலம் உள்ளிட்டவற்றில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று சித்ரா பவுர்ணமியாகும். இதையொட்டி தமிழக கோவில்களில் விழாக் கோலம் பூண்டிருந்தது. எல்லாக் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் செல்கின்றனர்.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்வசம் கடந்த 22-ந்தேதி புதன் கிழமை பிற்பகல் 2.50 மணி முதல் 3.35 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து உற்சவத்தின் முதல் நாள் காலை 11.30 மணிக்கு கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உற்சவர் பெரியநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் மகிழமரம் அருகே உற்சவர் அருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். அங்கு உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து தினமும் காலை வேளைகளில் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அபிஷேக ஆராதனைகளும், இரவு வேளைகளில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழமரம் அருகே உற்சவர் அருணாசலேஸ்வரருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும் இரவு 8 மணிக்கு ஸ்ரீகோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கோவில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடந்தது.
பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று காலை 7.52 மணி முதல் நாளை காலை 8.48 மணி வரை நடைபெற்றது. இதனையொட்டி இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் செல்ல தொடங்கினர். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளம் போல் நடந்து செல்கின்றனர். திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சென்னையில்
இதேபோல சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக கன்னியம்மன் கோவிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.