அரையாண்டு தேர்வு விடுமுறை எதிரொலி... திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்
திருச்செந்தூர்: பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் பலர் குடும்பத்துடன் கோயில், குளம் என செல்ல தொடங்கியிருக்கின்றனர்.
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கியுள்ளனர்.
கடலில் நீராடிய பின்னர் அவர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஜனவரி 1ம் தேதி புத்தாண்டினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் கோவிலில் அதிகரித்துள்ளது. இதனால் திருச்செந்தூர் கோயில் பகுதி முழுவதும் பக்தர்கள் தலைகளாக காணப்படுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். புத்தாண்டு நள்ளிரவு மற்றும் பொங்கல் பண்டிகை அன்று சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதுபோல் மாசி திருவிழா, வைகாசி விசாகம், ஐப்பசி கந்த சஷ்டி விழா ஆகியவற்றை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவை காண தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.