பக்தி இருக்க வேண்டியதுதான், ஆனால் ஒரு வரைமுறை வேண்டாமா?.. இந்த கூத்தை பாருங்களேன்!
சித்தர் என நினைத்து மனநோயாளிடம் பக்தர்கள் ஏமாந்துள்ளனர்.
Recommended Video
திருவண்ணாமலை: நம்ம ஆளுங்களுக்கு பக்தி முத்தி போயிட்டா, தலைகால் புரியாமல் ஆயிடுவாங்க போல! இந்த சம்பவத்தை கொஞ்சம் படியுங்களேன்!
திருவண்ணாமலை சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஏராளமானோர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து செல்வது வழக்கம். அப்படி வருபவர்கள் கண்டிப்பாக கிரிவலமும் மேற்கொள்வார்கள். கிரிவலப் பாதையில் காலங்காலமாக சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை சேலத்திலிருந்து சிலர் கிரிவலத்துக்காக வந்திருந்தனர். அவர்களுடன் ஒரு சாமியாரும் வந்திருந்தார். அவர் பச்சை நிற ஆடையை அணிந்திருந்தார். இவர்கள் அனைவரும் அண்ணா நுழைவு வாயில் அருகே வந்தனர். அங்கே ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு 50 வயது மேலிருக்கும்.
அதிர்ஷ்டம் கொட்டும்
அப்போது பச்சை நிற ஆடை சாமியார், சும்மா போகாமல் அந்த பக்கம் நடந்து சென்றவர்களிடம், "இதோ... இங்கே உட்கார்ந்திருக்கிறாரே... இவர் ஒரு பெரிய சித்தர்! இவருக்கு தேவையானதையெல்லாம் வாங்கி கொடுத்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும். அது மட்டும் இல்ல... ஒரு பேனாவால் அவர் நம்ம கையில் கிறுக்கினாலே போதும்.. நமக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொண்டு கொட்டும்" என்றார்.
கையில் கிறுக்கிய ஆசாமி
உடனே கிரிவலம் வந்தவர்கள் முண்டித்து கொண்டு தங்களிடமிருந்த பேனாவை கொடுத்து கையில் கிறுக்குமாறு வேண்டினர். எல்லாரும் தன் முன்னே கையை நீட்டுவதை கண்ட அந்த பெரியவரும், பக்தர்களிடமிருந்து பேனா வாங்கி அவர்களது கையில் என்னென்னவோ கிறுக்கி தள்ளினார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சாமியார் கையில் கிறுக்கும் விஷயம் தீயாக பரவியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. இதில் சில பேர், சாமியாருக்கு தேவையானதை செய்தால் நமக்கு எல்லாம் நடக்கும் என்பது நினைவுக்கு வர, திடீரென கடைத்தெருவுக்கு ஓடி சென்று பச்சை நிற சட்டை, பேண்ட் வாங்கி வந்து கொடுத்தனர்.
சிகரெட் சாமியார்
மேலும் சிலர் சிகரெட் வாங்கி கொடுத்து பக்தியின் அடுத்தகட்ட லெவலுக்கே போய்விட்டனர். சிகரெட்டை பார்த்ததும் நம்ம சாமியார், படக்கென பிடுங்கி ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஹாயாக பிடிக்க தொடங்கினார். சிறிது நேரத்துக்கெல்லாம் சிகரெட்டுக்களை மளமளவென ஊதித்தள்ளி விட்டார். சாமியார் சகட்டுமேனிக்கு சிகரெட்டை பிடித்து இழுத்து தள்ளுவதை கண்ட பக்தர்கள் அவரை "சிகரெட் சாமியார்" என 'பெட் நேம்' வைத்து அழைக்க தொடங்கிவிட்டனர்.
அதிர்ச்சியில் பக்தர்கள்
கூட்டம் இப்படி திடீரென கூடிவிடவும் அங்கு வந்த பாதுகாப்பு போலீசாருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி எல்லாம் கூட்டமாக இருக்கிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது நம்ம சிகரெட் சாமியார் பற்றி பக்தர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார், "யார் எதை சொன்னாலும் நம்பிவிடுவதா? இந்த முதியவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்! எல்லோரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்" என்று சத்தம் போட்டனர். பக்தர்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்து கொண்டு நின்றனர்.
பக்தி இருக்க வேண்டியதுதான், ஆனால் அதுக்கு ஒரு வரைமுறை வேண்டாமா? நம்மாளுங்களை தவிர வேற யாரால் இப்படியெல்லாம் நடந்துக்க முடியும்? மூடநம்பிக்கை புரையோடி போய்க்கிடந்தால் இது மட்டுந்தானா நடக்கும்??