ஆருத்ரா தரிசனம் - சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்ற
சிதம்பரம்: சிவபெருமானில் பஞ்சபூத தலங்களில் ஆகாச தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 2 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான திங்கள்கிழமை தேர்திருவிழா நடைபெற்றது. இரவு ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
மகா அபிஷேகம்
இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனம்
அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து சித்சபா பிரவேசம் செய்தனர். இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.
நெல்லையில் தரிசனம்
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாள் இன்று தாமிர சபையில் நடராஜன் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தரகோசமங்கை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு சந்தனகாப்பு கலைத்து,அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.