வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் முதல் சிங்கப்பூர் வரை சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம், திருப்பதி தொடங்கி சிங்கப்பூர் வரை பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து ராப்பத்து என வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
[Gallery: கோவிந்தா, வாசுதேவா.. சொர்க்கவாசல் தாழ்திறவாய்.. பக்தி படங்கள்!]
சென்னையில் பெருமாள் ஆலயங்களிலும், சிங்கபூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம்
அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நம்பெருமாள் பரமபத வாசலை காலை 5.15 மணிக்கு கடந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெருமாள் ஆலயங்கள்
மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில், கேசவ பெருமாள் கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா முழக்கமிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் சொர்க்கவாசல்
திருப்பதி ஏழுமையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. விஐபி தரிசனத்திற்கு பின்னர் 7 மணிக்கு மேல் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர்.
திருமலையில் மலர் அலங்காரம்
இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி நாளான இன்றும் துவாதசி நாளான நாளையும் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வருகைக்காக வைகுண்டத்தில் இருந்து 4 கிமீ தூரத்திற்கு சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு அன்னதானம், டீ, காபி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் சிறப்பு அலங்கரங்கள் செய்யப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசி
தென்கிழக்கு ஆசியாவின் திருப்பதி என்றழைக்கப்படும் சிங்கபூர் சீனிவாசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிங்கப்பூரில் சிரான்கூன் சாலையில் அருள்மிகு ஸ்ரீனிவாசப் பெருமாள் சர்வ அலங்கார நாயகராக பரமபத வாசலில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதிகாலை 4.55 மணிக்கு விஸ்வரூபம், திருப்பள்ளி எழுச்சி பூஜைக்கு பின்னர் சொர்க்க வாசல் வைபவம் நடைபெற்றது.