தை பூசம்: வடலூரில் ஜோதி தரிசனம்– மயிலையில் தெப்பத்திருவிழா
சென்னை:தை பூசம் திருவிழாவை தமிழகமெங்கும் வழக்கமான உற்சாகத்துடன் பக்தர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வடலூர் சத்திய ஞானசபையில் 143வது தைப்பூச ஜோதி தரிசன விழா அருட்பெருஞ் ஜோதி மகாமந்திரம் ஒலிக்க நேற்று காலை துவங்கியது.
ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் வடலூர் நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.
வடலூரில் பக்தர்கள்
டலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைபூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.
143வது ஜோதி தரிசனம் வியாழக்கிழமைகொடியேற்றத்துடன் துவங்கியது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் துவங்கியது.
பக்தர்கள் தரிசனம்
ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.
மேல்மருவத்தூரில் ஜோதி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 16-ந் தேதி (வியாழக்கிழமை) ஆதிபராசக்தி விளையாட்டு திடலில் உள்ள ஜோதி பீட வளாகத்தில் சக்தி மேடையில் தை பூச ஜோதி பெருவிழா நடைபெற்றது. இதனையொட்டி ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து புறப்பட்ட தைப்பூச மூல ஜோதி ஊர்வலம் ஆதிபராசக்திவிளையாட்டு திடல் அருகே பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜோதி திடலை வந்தடைந்தது. மாலை 6.15 மணிக்கு ஆன்மீக குரு பங்காருஅடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றி வைத்தார்.
தெப்பத்திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது.முதல் நாளான்று கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தொடங்கிய தெப்ப திருவிழாவை காண மாலை முதலே, மக்கள் கூட்டம் வரத்தொடங்கியது. இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் சிங்கார வேலர் தெப்பத்தில் வலம் வந்தார். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, மயிலை மாட வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வள்ளலார் ஊர்வலம்
மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவிலில் உள்ள வள்ளலார் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் வள்ளலார் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூரில் தரிசனம்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.