சட்டம், ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் இருந்து அசோக்குமார் திடீர் விடுவிப்பு
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் பொறுப்பில் இருந்து அசோக்குமார் ஐ.பி.எஸ்., விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வான அசோக்குமார் தமிழகப் பிரிவு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். முதல் பணியாக அவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். இதேபோல, தமிழகக் காவல்துறையின் பல்வேறு நிலைகளில் அசோக் குமார் பணிபுரிந்துள்ளார்.
2013 -ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாக, சி.பி.ஐ.யின் தெற்கு மண்டல இணை இயக்குநராக அசோக் குமார் இருந்தார். பின்னர் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பிய அசோக் குமார், தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றினார்.
பின்னர், ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவில் பணியாற்றினார். தொடர்ந்து உளவுத்துறைக்கு மாற்றப்பட்ட அவர், மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி யாக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வும் பெற்றார்.
இதையடுத்து 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியது தமிழக அரசு. இந்நிலையில் அவரது பணிக்காலம் முடிவடைய இன்னும் 2 மாதம் உள்ள நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் பொறுப்பில் அசோக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார்.