சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகாமலேயே பணி ஓய்வு பெற்ற ஜார்ஜ்.. பிரிவு உபசார விழாவை தவிர்த்தார்
சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகாமலேயே இன்றுடன் பணி ஓய்வு பெற்றார் தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி ஜார்ஜ்.
சென்னை: தீயணைப்புத்துறை இயக்குநர் டி.ஜி.பி. ஜார்ஜ் இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் அவர் பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டார்.
சென்னை காவல் ஆணையராக நீண்ட காலம் பணியாற்றியவர் ஜார்ஜ். ஆனால் கடந்த ஆண்டு குட்கா விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு இவர் எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து இவரும் சர்ச்சையில் சிக்கினார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பின்பும் காவல் ஆணையராகவே நீடித்து வந்தார்.
நீண்ட நாட்களுக்கு முன்பே இவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் பதவி அவருக்கு கிடைக்கவில்லை. சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு என்று பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படட் இவர் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. ஆகாமலேயே பணி ஓய்வு பெற்றுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவர் சென்னை கமிஷனராக இருந்தால் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்று திமுக வழக்கு தொடர்ந்தது. அதை தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
ஒரு வழக்கில் ஆஜராகாத ஜார்ஜை, அவர் ஒன்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல என்று அப்போதைய நீதிபதி ஆறுமுகசாமி கடிந்து கொண்டார். மேலும் சில வழக்குகளுக்கு ஆஜராகாத அவரை நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில் கமிஷனர் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த அவர் தீயணைப்பு துறை இயக்குநராக பணியாற்றி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.