ஆந்திர துப்பாக்கிச் சூடு எதிரொலி: எல்லையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை: செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆந்திர மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் அம்மாநில டிஐஜி காந்தராவ் தலைமையில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டை நட்த்தினர். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழக- ஆந்திரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட எல்லைகளில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பிகளுக்கு சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எஸ்பிகளுக்கு அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.