இந்தக் கருமத்தை முதலிலேயே செய்து தொலைத்திருந்தால் 20 உயிர்கள் பிழைத்திருக்குமே...!
சென்னை: தமிழகத்திலிருந்து ஆந்திர வனப்பகுதிக்குள் யாரேனும் செம்மரம் வெட்டிக் கடத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு 5 மாவட்ட எஸ்.பிக்களுக்கு தமிழக டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் முதலைகளுக்காக மரம் வெட்டப் போய் உயிரைப் பறி கொடுத்துள்ளனர் தமிழர்கள். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டம் எல்லையோரங்களில் வசிக்கும் தொழிலாளிகளைத்தான் ஆந்திர பண முதலைகள் செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் அப்போதும் கூட தமிழக அரசும், காவல்துறையும் சுதாரிக்கவில்லை. எல்லைப் பகுதிக்குள் தமிழக தொழிலாளர்களை செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அலட்சியம்.. அலட்சியம்.. அலட்சியமே மிதமிஞ்சியிருந்தது தமிழகத் தரப்பில்.
அதன் விளைவு இன்று 20 உயிர்களைப் பறித்து விட்டது ஆந்திர காவல்துறை. இப்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல விழித்தெழுந்துள்ளது தமிழக காவல்துறை.
வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டங்களில் இருந்து ஆந்திர வனப்பகுதிக்குள் செல்லும் தமிழர்கள் யார்? அவர்கள் எதற்காக காட்டுக்கு செல்கிறார்கள் என்பது பற்றிய தகவலை வனத்துறையிடம் போலீசார் சேகரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
இதனால் 5 மாவட்ட போலீசாரும் தங்கள் எல்லையோரங்களில் குறிப்பாக வனப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். எல்லையோர வனப்பகுதி முழுவதுமே வனத்துறை மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இன்று கொண்டு வரப்பட்டது.
செம்மரக் கடத்தல்காரர்கள் ஆந்திர வனப்பகுதிக்குள் நுழைந்து விடாதபடி அனைத்து முன் எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனராம்.
5 வேலூர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோதே இந்த நடவடிக்கையை முடுக்க விட்டு தமிழகத்திலிருந்து யாரும் கடத்தலுக்காக ஆந்திராவுக்குள் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நடந்த அவலம் தடுக்கப்பட்டிருக்கும்.