கூவத்தூர் களேபரம்.. ஆளுநரை நேரில் சந்தித்து டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்
ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராஜேந்திரன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதேபோல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் டி.ஜி.பி. ராஜேந்திரன். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், கூவத்தூரில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு டி.ஜி.பி ராஜேந்திரன் விளக்கமளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.