நீரா பானம் அருந்தியதால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? சபாநாயகர் தனபால் விளக்கம்
நீரா பானம் அருந்தியதால்தான் சபாநாயகர் தனபாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
கடந்த வாரம், சட்டசபையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது, 'நீரா பானம்' விற்பனைக்கு அனுமதி அளித்த, முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, 'நீரா பானம் என்றால் என்ன?' என, கேட்டார். இது ஆளும் கட்சியினருக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
எனவே, எம்எல்ஏக்கள் அனைவரும் நீரா பானம் பற்றி அறிந்து கொள்வதற்காக, பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்பாட்டில், நீரா பானம் வழங்கப்பட்டது. சட்டசபை கேண்டீனிலும் நீரா பானம் வைக்கப்பட்டது.
நீரா என்பது தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு வகை பானம். பனையிலிருந்து பதநீர் எடுப்பதை போன்றது. இந்த நிலையில் சபாநாயகர் தனபால் சில தினங்கள் முன்பு ரத்த அழுத்த பிரச்சினைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் நீரா பானத்தால்தான் பாதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின.
இதுகுறித்து சட்டசபையில் இன்று தனபால் பதில் அளித்தார். அவர் கூறுகையில், தான் நீரா பானம் அருந்தவேயில்லையே பிறகு எப்படி அதனால் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என்றார். நீரா என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கை பானம் என்பது குரிப்பிடத்தக்கது.