தனத்திரியோதசி : தீபாவளிக்கு முதல்நாள் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகுமாம்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் தனத்திரியோதசி என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் தங்கத்தையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்தால் வீட்டில் மென்மேலும் தங்கம் சேரும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு, பல நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு, போனஸ் வழங்குகின்றன. அந்த பணத்தை சிலர் தங்க நகைகளில் முதலீடு செய்வதன் காரணமாக, தங்கம் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, தீபாவாளியை ஒட்டிய நாட்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, மிக கூடுதலாக இருக்கும்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் கன மழை பெய்தது. இருப்பினும், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில், 2,850 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தீபாவளிக்கு, அதை விட அதிக அளவில் விற்பனை நடக்கும் என,கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் தங்க நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன.
தீபாவளிக்கு முதல்நாள் அக்டோபர் 28ம் நாள் தனத்திரியோதசி. இன்றைய தினம் தங்கம் வாங்குவது சிறப்பு. செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அக்ஷய திரிதியை போல தனத்திரியோதசி தினத்தன்று தீபாவளிக்கு வேண்டிய துணிமணிகளையும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் தங்கத்தையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்தால் வீட்டில் மென்மேலும் தங்கம் சேரும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டை விட, தற்போது, தங்கம் விலை 3000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும், நகை கடைகளில் கூட்டம் அதிகம் உள்ளது. பல நிறுவனங்களில் கடந்த வாரமே போனஸ் போடப்பட்டு விட்டதால் மக்களிடையே பணப் புழக்கம் நன்கு உள்ளது. இதனால், தீபாவளிக்கு முந்தைய நாள், தீபாவளியன்று, கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் வரை கூடுதலாக தங்கம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்று நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.