வரதட்சணையால் நின்ற திருமணம்: மணமகள் தற்கொலை, மாப்பிள்ளை தலைமறைவு: 4 பேர் கைது
தர்மபுரி: வரதட்சணை காரணமாக நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்றுபோனதால் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் தலைமறைவான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நவலை அருகேயுள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்பவரின் ஞானசேகர் மகள் துர்கா (வயது-22). முதுநிலைப் பட்டதாரி, இவருக்கும், சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த மணி மகன் ஜெயபிரகாஷ் (வயது-27) என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த மாதம் இரு வீட்டார் சார்பிலும் பேசி முடிவு செய்யப்பட்டது.
25,பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு மோட்டார்சைக்கிள் உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள் துர்காவுக்கு சீர்வரிசையாகக் கொடுப்பதாக அவரது தாய் வீட்டார் கூறியுள்ளனர்.
திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், துர்கா, ஜெயபிரகாஷ் ஆகியோரின் திருமணம் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறுவதாக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
இதனிடையில், ஜெயபிரகாஷின் தந்தை மணி, பெண் வீட்டாரிடம் திருமண சீர்வரிசைகளை திருமணத்துக்கு முன்பே வழங்க வேண்டும் எனக் கேட்டாராம். குடும்பச் சூழ்நிலை காரணமாக தற்போது நகை, சீர்வரிசைகள் வழங்க முடியாது, திருமணம் முடிந்ததும் கொடுக்கிறோம் என்று துர்காவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஜெயபிரகாஷின் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். பத்திரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில், திருமணம் நின்று போனதால், மனமுடைந்த துர்கா, கடந்த ஜூன்-1, ம் தேதி எலி மருந்தைக் குடித்துள்ளார்.
தகவலறிந்த உறவினர்கள், அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தொடர்ந்து மருத்துவச் சிகிச்சைப் பெற்று வந்த துர்கா, கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து துர்காவின் தந்தை ஞானசேகர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த கம்பைநல்லூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினரை வரதட்சணை கேட்டு மிரட்டியது, துன்புறுத்தியது, திருமணம் செய்யாமல் ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து, துர்காவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த தருமபுரி மாவட்டம், அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த மணி மகள் ஸ்ரீபிரியா (வயது-20), முருகேசன் மனைவி செந்தாமரை (வயது-45), சென்னன் மகன் முருகேசன் (வயது-47), தாசி மகன் பரசுராமன் (வயது-32) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள காவலர் ஜெயபிரகாஷ், அவரது தந்தை மணி ஆகியோரை தனிப் படை போலீஸார் தேடி வருகின்றனர்.