புது வண்டி ஒரே வருஷத்துல 25 முறை ரிப்பேரு.. பாதிக்கப்பட்டவர் தாராபுரத்தில் போராட்டம்!
தாராபுரத்தில் வண்டி வாங்கிய ஒரு வருஷத்தில் 25 தடவை பழுதானதால் பாதிக்கப்பட்டவர் ஷோ ரூம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாராபுரம் : ஒரு வருஷத்தில் 25 முறை பழுதான ஹோண்டா ஆக்டிவா வண்டியுடன் பாதிக்கப்பட்டவர் ஷோரூம் முன்னர் குடும்பத்துடக் போராட்டத்தில் ஈடுபட்டதால் தாராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தையடுத்த கவுண்டச்சிபுதூர் முன்னாள் யூனியன் கவுன்சிலரான செ. குப்புசாமி தனது குடும்பத்துடன் தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஹோண்டா ஷோரூம் முன்பு நேற்று திடீரனெ போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஷோரூமில் வாங்கிய ஹோண்டா ஆக்டிவா பைக் வாங்கி கடந்த 1 வருடத்திற்குள் சுமார் 25 முறை பழுதாகி நின்று விடுவதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மேலும் இதுகுறித்த பலமுறை புகார் கொடுத்தது மட்டுமின்றி பழுது பார்க்க பில் கொடுத்தும் வண்டியை சரியாக பழுது பார்த்து தர வில்லை என்றும் குப்புசாமி கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது வண்டி பழுதாகி நின்றுவிட்டதால் சுமார் 4 கி.மீ வண்டியை தள்ளி வந்துள்ளார்.
எச்சரிக்கை நோட்டீஸ்
இதனால் அடிக்கடி பழுதாகும் வண்டியின் பழுதை முறையாக பார்த்து கொடுக்க வலியுறுத்தி குப்புசாமி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். ஷோரூம் வாசலில் தனது வண்டியை நிறுத்தி அதில் இந்த எச்சரிக்கை இந்த கம்பெனி வாகனத்தை யாரும் வாங்காதீர்கள். அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
குடும்பத்துடன் போராட்டம்
அடிக்கடி பழுதாகி நிற்கும் வாகனத்தை சரிபார்த்து தராத ஷோரூம் நிர்வாகத்தை கண்டித்து மனைவி, மகன் மற்றும் மகளுடன் குப்புசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். குப்புசாமியின் இந்தப் போராட்டம் குறித்து அவரது நண்பர் மைக்ரோ சுரேஷ்குமார் முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார்.
வைரலான போராட்டம்
பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே முகநூலில் பலரின் விவாத தலைப்பாகிப் போனது இந்த போராட்டம். இதோடு 200க்கும் மேற்பட்ட ஷேர்களை அடுத்த சில விநாடிகளிலேயே பெற்றதால் குப்புசாமியின் போராட்டம் வைரலானது.
ஷோரூம் உறுதி
இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக தாராபுரம் ஹோண்டா ஷோரூம் குப்புசாமியின் வாகனத்தை சரி செய்து தருவதாக ஒப்பு கொண்டுள்ளது. மேலும் இனி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் பழுது நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இதனால் குப்புசாமியின் போராட்டத்திற்கு தொலைபேசி வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும் கருத்தகளை தெரிவித்தவர்களுக்கு அவரது நண்பர் முகநூலில் நன்றி தெரிவித்துள்ளார்.