மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் இன்று நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார். குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனம் மடாதிபதியை பல்லக்கில் தூக்கி சென்றனர்.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இப்படி பல்லக்கில் செல்லும் நிகழ்வை பட்டின பிரவேசம் என்பார்கள்.
விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி பட்டணப் பிரவேசம் நடைபெற இருந்த நிலையில், இதற்கு தடை விதிக்கப்பட்டது பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் காட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது.
தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம்... போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தடை நீக்கம்
இதையடுத்து இந்த நிகழ்விற்கான தடை நீக்கப்பட்டது. இந்த வருடம் திட்டப்படி பட்டினப்பிரவேசம் நடத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டது. அடுத்த வருடம் மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீனம் மடாதிபதியை நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை விழா, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா ஆகிய விழாக்கள் நடப்பது வழக்கம். இந்த விழாக்கள் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு அதன்பின் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
இன்று குருபூஜை
அந்த வகையில் நிகழாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இன்று 21ம் தேதி ஆதீன குரு முதல்வர் குருஞான சம்பந்தரின் குருபூஜை விழா தொடங்கியது. ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான பூங்காவில் உள்ள ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பல்லக்கில் இவர் ஏற.. பக்தர்கள் சுற்றி நின்று இவரை சுமந்து சென்று வழிபாடு செய்ய வைத்தனர்.
தரிசனம்
குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சன்னிதானத்தை நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு செய்வது மரபு. அதனடிப்படையில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்விற்கு எதிராக அங்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் எதுவும் நடக்கவில்லை. நாளை இவர் பட்டினப்பிரவேச வழிப்பாடு செய்ய உள்ள நிலையில் இன்றும் பல்லக்கில் சென்றது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு
முன்பு 2020ல் தருமபுரம் மடத்தின் ஆதீனமான மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியை பல்லக்கில் தூக்கி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் திக, விசிக போன்ற கட்சிகள் இதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை செய்வோம் என்று அறிவித்து இருந்தன. இதையடுத்து அடிபணிந்த ஆதீனம், பல்லக்கு வேண்டாம். நடந்தே செல்கிறேன் என்று கூறினார். ஆனால் இந்த வருடம் அவருக்கு எதிராக இப்படியான போராட்டங்கள் நடக்கவில்லை.