தர்மபுரி இளவரசன் மறைந்த 5-வது ஆண்டு நினைவு தினம்.. 2 கிராமங்களில் போலீஸ் குவிப்பு
இளவரசனின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
Recommended Video
தருமபுரி: ஜாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இறந்த தருமபுரி இளவரசனின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நத்தம் காலனி மற்றும் செல்லங்கொட்டாய் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் செல்லங்கொட்டாய் பகுதியை சேர்ந்த இரு வேறு பிரிவினரான திவ்யா - இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகளைச் சிதைத்து தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என திவ்யா மறுத்தார். அதற்கு அடுத்த நாள் 2013 ஜூலை 4-ம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்ட வாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு நடத்தியதுடன், இளவரசன் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கையை தாக்கல் செய்தது. இதனடிப்படையில் சிபிசிஐடி அறிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் இளவரசனின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பதற்றத்திற்குள்ளான நத்தம் காலனி மற்றும் செல்லங்கொட்டாய் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அப்பகுதிகளில் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இளவரசன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களை மட்டுமே அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதித்திருந்தாகவும் அரசியல் கட்சியினர் மற்றும் மற்ற அமைப்பினர் யாரையும் அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.