வனவிலங்குகளை வேட்டையாடி, சமைத்துச் சாப்பிடவர்கள் கைது – வனத்துறையினர் அதிரடி
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளான காட்டுப்பன்றி மற்றும் மானை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரியில் அமைந்துள்ள வீரப்பநாய்க்கன் பட்டியில் அதிக அளவில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து தீர்த்தமலை வனத்துறைக் காப்பாளர் வீரபத்திரன் தலைமையிலான குழுவானது சோதனையில் ஈடுபட்டது.
காட்டுபன்றி வேட்டை:
அச்சோதனையில் வீரப்பநாயக்கன்பட்டியில் உள்ள முருகன் என்ற விவசாயி ஒருவரின் வீட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடி கறி சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர் முருகனை கைது செய்தனர்.
மான் வேட்டை:
இதேபோல் மானை வேட்டையாடிக் கொன்று இறைச்சியை சமையல் செய்து கொண்டிருந்த நரிப்பள்ளி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் தெய்வமணி, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவானந்தம் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர்.
மூவர் கைது:
கைது செய்யப்பட்ட மூவரும் பேரும் அரூர் மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அபராதத் தொகை:
காட்டுப்பன்றியை வேட்டியாடியதற்காக முருகனுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதமும், மானை வேட்டையாடிய தெய்வமணி மற்றும் சிவானந்தம் ஆகிய இருவருக்கும் தலா 14 ஆயிரம் வீதம் ரூபாய் 28 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார். அத்தொகையை செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.