தருமபுரியில் தள்ளுவண்டிக்காரர்களிடம் மாமூல் வசூலித்த ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்!
தருமபுரி: தருமபுரி நகரில் மாமூல் வசூலில் ஈடுபட்ட தலைமைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் முனிராஜ். கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் முனிராஜ் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி அந்த எல்லையிலுள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கெடுபிடி மாமூல் வசூலில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக இரவு நேரத்தில் ரோந்து என்ற பெயரில் தள்ளுவண்டி மற்றும் டிபன் கடைகாரர்களிடம் மாமூல் வசூலித்து வந்ததுடன் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை ஓட்டி வரும் பொதுமக்களை மிரட்டியும் பணம் பறித்து வந்ததாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லோகநாதனுக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அனுப்பினர்.
இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முனிராஜ் பொதுமக்களிடம் இருந்து கட்டாய வசூல் செய்ததும் கடைகாரர்களிடம் இருந்து மாமூல் வசூலித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட முனிராஜை நேற்று அதிரடியாக "சஸ்பெண்ட்" செய்து உத்தரவிட்டார்.