தருமபுரி இளவரசன் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஹைகோர்ட் உத்தரவு
தருமபுரி இளவரசன் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் ரயில் தண்டவாளம் அருகே தலை சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலையாக? தற்கொலையா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக நடந்து வரும் போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக் கூறி தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த இளவரசனும் ஜாதி எதிர்ப்புகளை மீறி வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டனர்.
இந்த காதல் கலப்புத் திருமணத்தால் மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 3 கிராமங்கள் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும் வன்முறையில் இறங்கி கிராமங்களை சூறையாடினர். வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பல மாத காலம் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழ்ந்தனர்.
இந்த நிலையில் இந்தக் காதல் ஜோடியைப் பிரிக்க ஒரு பிரிவு கடுமையாக முயற்சித்து அதில் கடைசியில் வெற்றியும் கண்டு விட்டது. சென்டிமென்ட் மூலம் திவ்யாவின் மனதை மாற்றி, நான் தாயுடன்தான் இருப்பேன். என்னால் இளவரசனுடன் வாழ முடியாது என்று சொல்ல வைத்து விட்டனர். இதனால் மனம் உடைந்த நிலையில் சென்னையிலிருந்து தர்மபுரி திரும்பினார் இளவரசன்.
இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி காலையில் இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தலை சிதறிக் கிடந்தது. இதுதொடர்பான வழக்கு, ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பட்ட தகவல்கள் இருந்ததாக இளவரசனின் தந்தை இளங்கோ குற்றம்சாட்டியிருந்தார்
போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இளவரசனின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், இளவரசன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.