அமைச்சர் சரோஜா அடியாட்கள் ஆவணங்களை அள்ளிட்டு போய்ட்டாங்க - அதிகாரி ராஜமீனாட்சி அலறல்
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் அடியாட்கள் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் இருந்தஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக பெண் அதிகாரி ராஜமீனாட்சி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் உத்தரவின்படி அவரது ஆட்கள் தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்து சென்று விட்டதாக அதிகாரி ராஜமீனாட்சி குற்றம்சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலராக இருக்கும் ராஜமீனாட்சி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய சமனக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டல் விடுத்ததாக கடந்த 10ம் தேதி தெரிவித்திருந்தார்.
மேலும் தனது பதவியை நீட்டிப்பு செய்யவும், வேறு இடத்திற்கு பணி மாற்றுதல் அளிக்கவும் ரூ. 30 லட்சம் கேட்டதாகவும், இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது ரூ.10 லட்சம் அளித்ததாகவும் கூறியிருந்தார்.
பெண் அதிகாரியின் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் நிதிகையாடல் செய்த ராஜமீனாட்சி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணையை திசைதிருப்பவே உண்மைக்கு புறம்பான தகவல்களை ராஜமீனாட்சி தெரிவிப்பதாக ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று அமைச்ச்ர சரோஜா விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக ராஜமீனாட்சி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் சரோஜாவின் உத்தரவின் பேரிலேயே ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களை திரும்ப ஒப்படைக்காவிடில் சாலைக்கு வந்து போராட உள்ளதாகவும் ராஜமீனாட்சி தெரிவித்துள்ளார்.