ரூ30 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் சரோஜா- போலீசில் அதிகாரி மீனாட்சி புகார்
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக பெண் அதிகாரி மீனாட்சி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை : தமது பணியை நிரந்தரமாக்க ரூ30 லட்சம் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் பெண் அதிகாரி மீனாட்சி புகார் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரியாக உள்ள அதிகாரி மீனாட்சி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்பட்டதால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியை பெற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிகாரி மீனாட்சியை அந்தப் பணியை விட்டு செல்லுமாறு அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டியதாக மீனாட்சி நேற்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முதலில் நன்னடத்தை அதிகாரி மூலம் தொந்தரவு கொடுத்ததாகவும், அதன் பின்னர் தன்னை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கே அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் மீனாட்சி கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அமைச்சர் சரோஜா அதிகாரி மீனாட்சியை அழைத்து ஏக வசனத்தில் திட்டியதாகவும், அமைச்சரின் கணவரும் தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
ஓடிப்போய்விடு என மிரட்டல்
மீனாட்சி வகிக்கும் பதவிக்கு ரூ.30 லட்சம் வரை பணம் கொடுக்க பலர் தயாராக இருப்பதாகவும், ஆனால் எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தாலும் பணியை விட்டு விலகாததற்காக மீனாட்சியை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் மிரட்டியதாக அதிகாரி குற்றம்சாட்டினார். பணியை விட்டு செல்லாவிடில் சந்தேகப் புகார்களை போட்டு வேலையை காலி செய்வதோடு, நடத்தை மீது களங்கம் ஏற்படுத்துவதாக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தியமாகவும் மீனாட்சி கூறினார்.
கொன்றுவிடுவேன்
பணியை விட்டு செல்லும் வரை விட மாட்டேன் என்று அமைச்ச்ர மிரட்டியதோடு கொலை செய்யவும் தாங்கள் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டப்பட்டதாக மீனாட்சி கூறியுள்ளார். "நான் உயிர் பிழைத்ததே கடவுளின் ஆசி தான் என்றும், அமைச்சர் என்னை மிரட்டியதைத் தொடர்ந்து அமைச்சர் வீட்டின் வெளியே வந்து நான் அழுத காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிளில் பதிவாகியுள்ளது என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார்.
பணி மாறுதல் தர மறுப்பு
தன்னுடைய பணி மாறுதலுக்காக ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது ரூ.10 லட்சம் தந்துள்ளதாகவும் ஆனால் இடமாற்றம் தராமல் இழுத்தடிப்பதோடு பணியை நிரந்தரம் செய்ய விடமாட்டேன் என்றும் அச்சுறுத்துவதாக மீனாட்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிகாரி மீனாட்சி சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று காலை புகார் மனு அளித்துள்ளார்.
நடவடிக்கை தேவை
அதில் தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனாட்சி புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது சென்னை போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் இப்போது கேள்விக்குறி.