சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. 2 பெண் குழந்தைகள் பலி.. தர்மபுரி அருகே கொடுமை
தர்மபுரி: போச்சம்பள்ளி அருகே பாருர் அடுத்த நாகர்குட்டை என்னும் இடத்தில் சாலையோரத்தில் உள்ள 80 அடி பள்ளம் கொண்ட கிணற்றில் கார் கவிழ்ந்து இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், ஆனந்த், ரமா தம்பதியினர். இவர்களுக்கு ரக்ஷிதா (7) மற்றும் தர்ஷினி (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் போச்சம்பள்ளி செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பச்சியப்பன் மகளுக்கு கொல்லாபுரியம்மன் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. 2 பெண் குழந்தைகள் பலி.. தர்மபுரி அருகே கொடுமை #Dharmapuri pic.twitter.com/srv0GlTpba
— Oneindia Tamil (@thatsTamil) September 13, 2018
நேற்று மதியம் ஆசிரியரின் வீட்டில் திருமணநிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக நாகனூரில் இருந்து ரமா, தங்கவேல், ராஜேந்திரன், பிரித்தா, ரக்ஷிதா, தர்ஷினி ஆகிய ஆறு பேரும் காரில் செல்லம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாருர் அடுத்த நாகர்குட்டை என்னும் இடத்தில் எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் காரை வலது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த பழனி என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள கினற்றில் கார் கவிழ்ந்தது.
கார் கவிழ்ந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரிலிருந்த, ரமா, தங்கவேல், ராஜேந்திரன், பிரித்தா, ஆகிய நான்கு பேருரை காப்பாற்றினர். அதற்குள்ளாக கார் முழுவதுமாக மூழ்கி கிணற்றிற்குள் சென்றது. இதில் நீச்சல் தெரியாத இரு குழந்தைகளும் காரிலிருந்து வெளியே வர முடியாமல் மூழ்கினர். விபரம் அறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் கிரேன் உதவியுடன் கார் மற்றும் காரிலிருந்த இரு குழந்தைளின் உடல்களும் மீட்க்கப்பட்டது.. திருமண நிகழ்விற்கு வந்த போது எதிர்பாராத விதமாக நடந்த இச்சம்பவம் அக்கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.