தஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும்.. வழக்கறிஞர் ராஜ்குமார் தகவல்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும் என வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும் என அவரது வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மென்பொறியாளர் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேட்டதும் சிறுமி ஹாசினியின் தந்தை பாபு நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீடு அடிப்படை உரிமை
இந்நிலையில் தஷ்வந்திற்கு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அவரது வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை என்பதால் அரசே மேல்முறையீடு செய்யும் என்றார்.
2 நீதிபதிகள் விசாரிப்பர்
மரண தண்டனை என்பதால் வழக்கை பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கையும் மேல்முறையீட்டு வழக்கையும் சேர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.
தண்டனை நிறுத்தி வைக்கப்படும்
விசாரணையின் அடிப்படையிலேயே தீர்ப்பை நிறைவேற்றுவது குறித்து நீதிபதிகள் முடிவு செய்வார்கள் என்றும் தஷ்வந்தின் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறினார். அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து வசதிகளும்
கீழ் நீதிமன்றத்தில் விசாரித்தது போலவே உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கவும் தமிழக அரசே அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்றும் தஷ்வந்தின் வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.