ஹாசினி கொலையாளி தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சராமரி தாக்குதல் - விலகிய வக்கீல்
சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது மாதர் சங்கத்தினர் செருப்பை வீசி அடித்தனர்.
Recommended Video
சென்னை: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்து தாயை கொன்று விட்டு தப்பிய தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டான்.
விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட தஷ்வந்த், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காவிட்டால் தந்தையை கொல்ல முடிவெடுத்ததாகவும் கூறினார். தனது கொலையை ஒப்புக்கொண்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுமி ஹாசினி கொலை
கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளான்.
மும்பையில் தஷ்வந்த் கைது
இந்த சூழ்நிலையில் தாய் சரளாவை கொன்ற வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை புழல் சிறையில் அடைத்தனர். சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தஷ்வந்த்தை ஹாசினி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் மாங்காடு காவல்நிலைய போலீசார் ஆஜர்படுத்தவில்லை.
சிறுமி கொலையில் ஆஜர்
இதனையடுத்து தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்துக்கு சிறுமி ஹாசினி கொலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தஷ்வந்த் இன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்டார்.
தஷ்வந்த் மீது தாக்கிய பெண்கள்
அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் தஷ்வந்த் மீது சராமரியாக தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும் வீசினர். சிறுமியை கொன்று விட்டு அம்மாவையும் கொன்றவனை உயிரோடு விடக்கூடாது என்று கூறிக்கொண்டே அடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் தஷ்வந்தை மீட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
தஷ்வந்த் வக்கீல் விலகல்
இதனிடையே ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வக்கீல் விஜயகுமார் விலகி விட்டார். தஷ்வந்துக்கு இனி ஆஜராகப்போவதில்லை என்று கூறினார். இதனையடுத்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த், தமக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதி வேல்முருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடிக்கிறாங்க தண்டனை கொடுங்க
நீதிமன்றத்தில் ஆஜராக வரும்போதே தம் மீது மாதர் சங்கத்தினர் தாக்குதல் நடத்தினர் என்று தஷ்வந்த் கூறினார். தனக்காக தானே ஆஜராகி வாதாடுவதாகவும் கூறினார். தனக்கு உடனே தண்டனை கொடுங்கள் என்றும் கேட்டார் தஷ்வந்த். அப்போது நீதிபதி, இலவச சட்ட உதவி மையத்தை அணுகுமாறு கூறினார்.