வீரமணியை மீண்டும் சீண்டிய தயா அழகிரி!
சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை மீண்டும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக சீண்டியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனான தயா அழகிரி.
திமுகவில் மீண்டும் இணைய மு.க.அழகிரி முயற்சி செய்து வரும் நிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
இதுபற்றி கி.வீரமணியிடம் சமீபத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.
இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களில், தயா அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், வீரமணியை கடுமையாக தாக்கி பதிவிட்டார்.
— Dhaya Alagiri (@dhayaalagiri) August 25, 2018
"காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்." என்று தயா அழகிரி தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் வீரமணியை சீண்டியுள்ளார் தயா அழகிரி. கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதில் தவறில்லை என்று வீரமணி கூறிய செய்தி துணுக்கை ட்விட்டரில் ஷேர் செய்த தயா அழகிரி, வாயை மூடும் எமோஜியை பதிவிட்டுள்ளார். வீரமணி வயதில் பெரியவர் என்பதால் தயா அழகிரி முன்பு கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பல மட்டங்களிலும் கண்டனங்கள் எழுந்தன. எனவே இப்போது வேறு மாதிரி எமோஜி மூலம் பதில் சொல்லியுள்ளார் தயா அழகிரி.
வீரமணியின் பேச்சை கிண்டல் செய்வதை போல இது அமைந்துள்ளதால் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.