அப்பல்லோவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்
சிகிச்சை முடிந்ததையடுத்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்ததையடுத்து வீடு திரும்பினார்.
தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாகவே கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவர் மேலும் சோகத்திலும் துயரத்திலும் இருந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தயாளு அம்மாள் அனுமதித்தவுடனேயே ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி, செல்வி, மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். நேற்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனை சென்று தயாளு அம்மாள் உடல்நலம் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று பிற்பகலுக்கு பின்னர் சீராக இருக்க தொடங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!