தயாநிதி மாறன் முன் ஜாமீன் ரத்தாகுமா? சி.பி.ஐ. மனு மீது ஆக.10-ல் ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட 6 வாரகால இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்தார் என்பது புகாராகும். இது குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனின் உதவியாளர் மற்றும் சன் டிவி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் தயாநிதி மாறன். இதையடுத்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 6 வார காலம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதன் பின்னர் கடந்த மாதம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி விசாரணையை தயாநிதி எதிர்கொண்டார். ஆனால் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்காதததால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.
இவ்வழக்கு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன் திங்கள்கிழமையன்று தீர்ப்பளிக்கப்படும் என்று கூறினார்.