சிலை திருட்டு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான்...
சிலை திருட்டு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க காரணமாக இருந்தவர் தீனதயாளன்தான்.
Recommended Video
சென்னை: சிலை திருட்டு மற்றும் கடத்தலில் சிக்கிய தீனதயாளன்தான் தற்போதைய பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக இருந்தவர் ஆவார்.
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரணடைந்தார். ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் தமிழகத்தில் உள்ள பழங்காலக் கோவில்கள் அனைத்தின் விவரமும் அடங்கிய புத்தகம் ஒன்றை வைத்து தனது தொழிலை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
அதை விட அந்தப் புத்தகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து புராதன கோவில்களின் விவரம், அதில் உள்ள சிலைகளின் விவரம், அவற்றின் மதிப்பு, காலம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக உள்ளது. இதனால் மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு தீனதயாளன் செயல்பட்டு வந்திருப்பது உறுதியானது.
அதிர்ச்சி
இந்தப் புத்தகத்தைப் பார்வையிட்ட டெல்லியிலிருந்து ஆய்வுக்காக வந்துள்ள தொல்லியல்துறை நிபுணர்கள் குழுவினர் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். அரசு அதிகாரிகளிடம் கூட இந்த அளவுக்கு விரிவான விவரம் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
300-ஐ தாண்டிய சிலைகள்
இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 187 சிலைகள் மீட்கப்பட்டன. இதுவரை போலீஸாருக்கு கிடைத்த சிலைகளின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.
பல்வேறு வீடுகள்
தென் மாவட்ட கோயில் ஒன்றில் காவலாளியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கு ஒன்றும் தீனதயாளன் மீது நிலுவையில் உள்ளது. இதனிடையே தீனதயாளன் வீட்டில் பழங்கால மரச்சிற்பங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. சிலைக் கடத்தலில் தொடர்புடைய தீனதயாளன் அடிக்கடி வீட்டை மாற்றியமைத்ததாக தகவல் தெரிய வந்ததால் வீட்டின் பல இடங்களில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
விஸ்வரூபம் எடுக்கும் சிலை திருட்டு
தீனதயாளன் முதல் அறநிலையத் துறை ஆணையர் கவிதா வரை இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு கொள்கை முடிவை அறிவித்துள்ளது.