திலீப்புக்கு ஜாமீன் வழங்க அங்கமாலி கோர்ட் மறுப்பு... போலீஸ் கஸ்டடி மேலும் ஒரு நாள் நீட்டிப்பு!
பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திலீப்பின் போலீஸ் கஸ்டடி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திலீப்பின் போலீஸ் கஸ்டடி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் திலீப்புக்கு ஜாமீன் வழங்கவும் அங்கமாலி நீதிமன்றம் மறுத்துள்ளது.
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் நடிகர் திலீப்பை ஆலுவா காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திலீப் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திலீப்பை அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திலீப்பை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர்.
திலீப்பிடம் தீவிர விசாரணை
ஆனால் நீதிமன்றம் 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கியது. இதையடுத்து திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திரிச்சூர், எர்ணாக்குளம் உள்ளிட்ட இடங்களுக்கும் திலீப்பை போலீசார் அழைத்து சென்றனர்.
2 நாட்கள் கஸ்டடி முடிவு
திலீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திலீப்புக்கு அளிக்கப்பட்ட போலீஸ் கஸ்டடி இன்று காலை 11 மணியுடன் நிறைவடைந்தது.
ஜாமீன் மனு விசாரணை
இதையடுத்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திலீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறியுள்ள போலீஸ் கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
காவல் நீட்டிப்பு
இதையடுத்து அவரது போலீஸ் கஸ்டடியை போலீசார் மேலும் ஒரு நாள் நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள் அவரது ஜாமீன் மனுவையும் நிராகரித்தனர்.