தேர்தலுக்கு அடையாளம் தேவைப்படுவதால் தினகரன் தனிக்கட்சி... திவாகரன் விளக்கம்!
அதிமுகவை மீட்கவே தற்காலிகமாக புதிய கட்சி தொடங்கப்படுகிறது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுகவை மீட்கவே தற்காலிகமாக புதிய கட்சி தொடங்கப்படுகிறது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுவதால் புதிய கட்சி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா சகோதரர் திவாகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : வருகிற 15ம் தேதி தினகரன் கட்சி தொடங்க இருப்பது தற்காலிக அடையாளம் மட்டுமே. வரக்க்கூடிய தேர்தலை சந்திப்பதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதால் இந்த தற்காலிக கட்சியை தொடங்க இருக்கிறார்.
அதிமுகவின் கட்சி மற்றும் சின்னத்தை மீட்கும் வரை இந்த தற்காலிக அடையாளம் இருக்கும். இந்த கட்சி தொடங்குவது காலதாமதமான முடிவு அல்ல சரி நேரத்தில் தான் தொடங்க உள்ளோம். சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறுவதாக வரும் தகவல் பொய்யானது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அவர் நடந்து வருகிறார் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.