நம்ம ஊரு, நம்ம கெத்து.. டோணி தமிழ் பேசும் அழகே தனிதான்!
சென்னை, திண்டுக்கல் (நத்தம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வரும் 27ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ள தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 கிரிக்கெட் போட்டியின் கோப்பையை சென்னையில் இந்திய அணி கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார்.
இந்த விழாவில் பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி, கேரள கிரிக்கெட் சங்க தலைவர் டி.சி.மேத்யூ, ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் அர்ஷத் அயுப், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் பிஸ்வரூப் தே உள்ளிட்ட பிசிசிஐ முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் டோணியை தனது உரையின்போது புகழ்ந்து தள்ளினார். பதிலுக்கு டோணி தமிழில் பேசியதுதான் ஹைலைட்.
'எப்படி இருக்கீங்க...?'என்று தமிழில் டோணி கேட்டதும், அரங்கமே கை தட்டலாலும், விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது. இனிவரும் காலங்களில் அடிக்கடி சென்னைக்கு வருவேன் என்று டோணி உறுதியாக கூறினார்.
இந்த டி20 தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்ட சீனியர்கள் இடம்பெற்றுள்ளதை சுட்டி காட்டிய டோணி,
இந்திய அணி மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்களுக்கு, இந்த தொடரில் பெரிய அளவு வருமானம் கிடைக்காது. கிரிக்கெட்டுக்கு திருப்பிச் செலுத்தும் வாய்ப்பாக இதை அவர்கள் கருத வேண்டும் என டோணி தெரிவித்தார்.
Our @msdhoni speaks in Tamil #TNPL #NammaOoruNammaGethu #TNPLAarambam pic.twitter.com/DhIp66VBOT
— TNPL (@TNPremierLeague) August 19, 2016
இந்த தொடர் மூலம் தமிழகத்தின் குக்கிராமங்களிலும் ஒளிந்துள்ள கிரிக்கெட் திறமை வெளியே வரும் என டோணி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு பிரிமீயர் லீக்கிற்காக தமிழில் டோணி குட்டி வாக்கியம் பேசியுள்ளார். அந்த வீடியோவை சமூக தளங்களில் தமிழக பிரிமீயர் லீக் நிர்வாகம் பகிர்ந்து கொண்டுள்ளது.
அதில், "டிஎன்பிஎல்-க்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க. நம்ம ஊரு, நம்ம கெத்து" என கொஞ்சும் தமிழில் டோணி தமிழ் பேசி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.