சகாயம் அழைப்புக்கு செம வரவேற்பு.. வேட்டி விற்பனை விறு விறு!
சென்னை: அரசு அலுவலகங்களில் வேட்டி தினம் கொண்டாடுமாறு கோஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் அழைப்பு விடுத்ததற்கு நல்ல வரவேற்பு கிளம்பியுள்ளது. வேட்டி வாங்க ஆண்கள் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கதர் வேட்டி விற்பனை சூடு பிடித்துள்ளதாக கோ ஆப்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலருக்கும் வேட்டி மீதான மோகம் அதிகரித்திருப்பதையும், சகாயமே சொல்லி விட்டார் , கேட்காமல் இருப்பதா என்ற உற்சாக மனப்பான்மையுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அரசு அலுவலர்கள் மட்டுமல்ல
அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வேட்டி தினத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசு அலுவலகங்களில் கைத்தறி வேட்டி விற்பனை மையங்கள்
அரசு அலுவலக வளாகங்களில் வேட்டிகள், சேலைகள் வாங்குவதற்காக கோ ஆப்டெக்ஸ் சார்பில் சிறப்பு ஷோரூம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு கைத்தறி வேட்டி, சேலை வாங்க நல்ல கூட்டம் கூடுகிறது.
வழக்கத்தை விட விற்பனை அதிகரிப்பு
வேட்டி தின அறிவிப்பைத் தொடர்ந்து வழக்கத்தை விட வேட்டி விற்பனை சிறிதளவு அதிகரித்து உள்ளதாக ஈரோடு வியாபாரிகள் கூறுகிறார்கள்.
கோவில்பட்டியில்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் வேட்டி கட்டிய ஊழியர்களால் நேற்று களைகட்டியது. வேட்டி தினத்தையொட்டி வேட்டி கட்டி வந்த ஊழியர்கள் உதவி கலெக்டர் விஜயகர்த்திகேயன் தலைமையில் உறுதிமொழியும் ஏற்றனர்.
ஸ்டார் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை வருமா...
தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் வேட்டி கட்டி வந்தால் உள்ளே விட மாட்டார்கள். பெரிய பெரிய விஐபிகளுக்கு மட்டும்தான் அனுமதி தருகிறார்கள். சாதாரணமானவர்கள் வேட்டி கட்டி போனால் தடுத்து விடுவார்கள். அவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது வேட்டிப் பிரியர்களின் ஆதங்கத்துடன் கூடிய கோரிக்கையாகும்.