வேட்டி கட்டிட்டு 'தண்ணி' அடிச்சா கழன்று விடுமே.. அதற்காகத்தான் தடை: கிரிக்கெட் கிளப் விளக்கம்!
சென்னை: குடிபோதையில் வேட்டி கட்டியிருந்தால் கழன்று விழுந்து மானக்கேடாகி விடுமே என்பதற்காகத்தான் வேட்டி கட்டிக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். யார் வேண்டுமானாலும் எங்களது கிளப்புக்கு வரலாம். ஆனால் வேட்டி கட்டி வரக் கூடாது. வேட்டி கட்டினால் இங்கு வருவதைத் தவிர்த்து விடுங்கள். யாரயைும் வாங்க வாங்க என்று நாங்கள் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை என்று திமிர்த்தனமாக கூறியுள்ளது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்.
வேட்டி கட்டி வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் மூத்த வக்கீல் காந்தி உள்ளிட்டோரை விதிமுறைப்படி வேட்டி கட்டி வரக் கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது இந்த கிளப்.
இதுகுறித்து சட்டசபையிலும் பிரச்சினை கிளப்பப்பட்டது. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என்று அரசும் கூறியுள்ளது. இந்த நிலையில் வேட்டிக்கு ஏன் தடை என்பது குறித்து நூதனமான விளக்கம் ஒன்றை அந்த கிளப் தெரிவித்துள்ளது.
ரூல்ஸ் என்னன்னா...
இந்த கிளப்பின் ஆடை விதிமுறை என்ன சொல்கிறது என்றால்.. பேன்ட் போடலாம். சட்டை போடலா். காலர் வைத்த டி சர்ட் போடலாம். தோலால் ஆன ஷூக்களைப் போடலாம். மற்றபடி வேட்டி கட்டி வரக் கூடாது. செருப்பு போட்டுக் கொண்டு வரக் கூடாது.
யாருப்பா இவங்களைக் கூப்பிட்டது...
இப்படி லூசுத்தனமான விதிமுறைகளை வைத்துக் கொண்டிருக்கும் இந்த கிளப் தற்போது நீதிபதி உள்ளிட்டோரை புத்தக விழாவுக்கு அழைத்த உறுப்பினர் மீது பாய்ந்துள்ளதாம். கிளப் விதிமுறை தெரிந்தும் கூட ஏன் கூப்பிட்டார் அவர் என்று அவரை நேரில் கூப்பிட்டு கடிந்துள்ளனராம் கிளப் நிர்வாகிகளும். அவரும் தெரியாமல் செய்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்.
அடுத்த வருடம் பரிசீலிப்போம்
ஆனால் வேட்டிக்குத் தடை என்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளதால் தனது விதிமுறைகளை அடுத்த வருட வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மறு பரிசீலனை செய்வதாக கிளப் கூறியுள்ளது.
வேட்டி கட்டி வந்தால் தப்புதான்
ஆனால் இந்த கிளப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் வேட்டிக்குத் தடை விதித்திருப்பதை நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம்தான் ரொம்ப வினோதமாக இருக்கிறது. கேடியு மூர்த்தி என்ற அந்த உறுப்பினர் கூறுகையில், கிளப்புக்கு வருபவர்கள், வேட்டி கட்டியிருந்தால், மது அருந்தும்போதும், மது அருந்திய பிறகும் வேட்டி கழன்று போய் தர்மசங்கடமாகி விடலாம். அதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கத்தான் வேட்டிக்குத் தடை விதித்திருக்கிறோம். இதையெல்லாம் போய் வெளிப்படையாக சொல்ல முடியுமா என்ன என்று கேட்கிறார் இந்த மூர்த்தி.
வராட்டி போங்க.. யாரு கூப்பிட்டா..
மேலும் அவர் கூறுகையில், கிளப் விதிமுறைகளை அனைவரும் மதிக்க வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும். இது எங்களது உரிமையாகும். இதை யாரும் மாற்ற முடியாது. கிளப்புக்கு வருவோர் நிச்சயம் விதிமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும். யாரையும் நாங்கள் வாங்க வாங்க என்று கட்டாயப்படுத்தவில்லை என்று சொல்கிறார் மூர்த்தி.
அப்ப வேட்டி கட்டினவங்க குடிகாரர்களா...
மூர்த்தி சொல்வதைப் பார்த்தால் வேட்டி கட்டியவர்கள் எல்லோருமே குடிகாரர்கள் என்பது போல வருகிறதே... ஒரு வேளை பேன்ட் போட்டவர்கள் குடித்தால், பேன்ட் கழன்று விழாதோ... ஜிப் போடாட்டி கழன்று போய் விடுமே..! - மூர்த்திதான் விளக்கம் தர வேண்டும்!!