அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ராம மோகன் ராவ்? - மகனுக்கு ரூ.300 கோடி ஒப்பந்தம் கிடைத்தது எப்படி?
அரசு மருத்துவமனைகளுக்கும், மருத்துவ கல்லூரிகளுக்கும் தூய்மை பணிகள் செய்வதற்கான 300 கோடி ரூபாய் ஒப்பந்தம் ராம மோகன் ராவின் மகனுக்கு கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: வருமான வரித்துறை சோதனை மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மீது பல திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவர் தலைமை செயலாளராக இருந்த போது அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மகனுக்கு பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு பலன் கிடைக்கும் வகையில் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஹவுஸ் கீப்பிங் போன்ற தூய்மை பணிகள் அந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
ரூ. 100 கோடி நிலம்
வீட்டு வசதி வாரியத்தின் ரூ. 100 கோடி மதிப்புள்ள 2.28 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கல்வியாளர் ஒருவர் பின்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல கோடி ஏக்கர் நிலம்
சென்னை வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த ராமாபுரம் கிராமம் தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சர்வே எண் 134/10ல் உள்ள 2.28 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வள்ளியம்மை சொசைட்டி என்ற பெயரில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலத்தை கையகப்படுத்த நீதிமன்ற உத்தரவு இருந்தும் ராம் மோகன ராவ் அதை கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
விதிமீறல்
ராம மோகன ராவும் அவரது மகன் விவேக்கும் அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்காக பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருவது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஹவுஸ் கீப்பிங் போன்ற தூய்மை பணிகள் அந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி கடந்த ஏப்ரல் மாதம் பத்மாவதி நிறுவனத்துக்கு ரூ.300க்கு கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சந்தி சிரிக்கிறது
அரசு மருத்துவமனைகளில் சுத்தமும், சுகாதாரமும் சந்தி சிரிக்கிறது. பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் டெண்டர் எடுத்தாலும் சுத்தம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் நிலையில் தான் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களே துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளையடித்தால் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்தின் லட்சணம் இப்படித்தான் இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.