இந்தியில் பேசாததால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை!
இந்தியில் பேசச் சொல்லி இந்திய கடற்படையினர் தாக்கியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ராமேஸ்வரம்: இந்தி தெரியாமல் மீன் பிடித்தால் சுட்டு கொல்வோம் என்று மீனவர்களை இந்திய கடற்படையினர் மிரட்டிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, ராணி அபாக்கா என்ற இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 3 படகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ரப்பர் குண்டுகளை வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை என்பவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இது வரை இலங்கைக் கடற்படையினரே ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி வந்த நிலையில் இந்தியக் கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கியுள்ளது மீனவ மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக
இலங்கை மீனவர்கள் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. எனினும் இது வரை இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியதே இல்லை,எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களை கைது செய்வதையே இந்திய கடற்படையினர் வழக்கமாக வைத்துள்ளனர்.
தமிழில் பதில்
இதனிடையே இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை என்ற மீனவருக்கு இடது முழங்கையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். இதே போன்று ஜான்சன் என்ற மீனவரும் படுகாயமடைந்துள்ளார். கடலோர காவல்படையினர் மீனவர்களின் படகில் வந்து கேள்வி கேட்ட போது மீனவர்கள் தமிழில் பதில் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் துன்புறுத்தல்
இதற்கு ஆத்திரத்தில் இருந்த அதிகாரிகள் அவர்களை இந்தியில் பேசுமாறு அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் கூறியுள்ளனர். இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பில்லை
இந்தியக் கடற்படையினரே ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு அவர்களை இந்தியில் பேச மிரட்டி இருக்கும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்திய அரசிடமே பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.